- துவாரகை தலைவன்
செத்த மரத்துண்டைச்
செதுக்கி உருப்பெரும்
முதல் அச்சு.
கலை உயிர் முளை விட்டு
உணர்வுகள் துளிர்க்கும்.
அதை வைத்து
அடுத்தடுத்து கலைஞன் செய்யும்
வார்ப்புச் சிலைகள்.
உணர்வுகள் நெளியும் வளைவுகள்
உடலெங்கும்...
இயற்கை சிற்பி
என்றோ எப்போதோ
மனிதனின் முகத்தை
கற்பனை செய்து உருவாக்கியது
பரிணாம அச்சு.
அதை வைத்து
தொடர்ந்து பல கோடி யாண்டுகளாக
அது செய்த வார்ப்புகளில்
பல நூறு மிருக முகங்களின் வரிசை...
தான் தோராயமாக
நினைவில் செதுக்கிய
மனித முகத்தை யடைவது
இயற்கையின் இலக்கு.
அதை முழுமையாகக் காணும் வரை
மரபணு மாற்ற மாயாஜாலங்கள் புரியும்.
பல்வேறு இனக்கிளைகளில்
வார்ப்புக் கொத்துகள்.
சளைக்காது இயற்கை
வார்பு வேலையைத் தொடரும்.
இறுதியில் அகப்பட்டது
இதுவரை அது தேடிக் கொண்டிருந்த
மனித முகம்.
வார்ப்பில் தெரிவது
என்றோ ஆதியில்
இயற்கை கற்பனை செய்த
ஒரு மனித முகம்.
கலைஞன் தன் படைப்பைக்
கைகளால் தொட்டு
மகிழும் வேளை.
இயற்கை அதிர்ச்சியில்
சற்று உறையும்.
வார்ப்பில் கிடைத்த
முகத்திற்குள் திரளும்
மற்றொரு முகம்
பகுத்தறிவு.
பூமி இதுவரை காணாத
புதிய முகம்.
அதிலிருப்பது
சிரிப்பா அல்லது துயரா என்ற புதிரை
அலட்சியம் செய்யும் இயற்கை.
இன்னும் வளர்கிறது அதன்
வார்ப்புக் கலை ...
நன்றி : புதுப்புனல் மார்ச் 2013
No comments:
Post a Comment