- துவாரகை தலைவன்
பூமியின் மேல் பரப்பில் எங்கும் காணமுடியாத உயரமான மலையாக இமயமலை இருக்கிறது.மிகப்பெரிய நீர்வீழ்ச்சியாக நயகரா நீர்வீழ்ச்சி இருக்கிறது.உலகம் முழுவதும் பல மலைகள் உள்ளன.அவற்றில் அழகான வளமான மலைகள் நிறைய உள்ளன.ஆனால் அவற்றுள் இமயமலை முதன்மையானதாக இருக்கிறது.அது போலவே நயகரா நீர்வீழ்ச்சி அருவிகளுக்கெல்லாம் அரசியாக உள்ளது.இயற்கையின் படைப்பில் உள்ள அனைத்திலுமே மிகசிறந்த ஒன்று இருக்கும்.அது சிறந்த மலராக இருக்கலாம் அல்லது அழகிய பறவையாகவும் இருக்கலாம்.எல்லாமே தற்செயலாக நடந்தவை அல்லது நடப்பவை என்று நாம் கூறலாம்.அதே வேளையில் இயற்கை தான் வெளிப்படுத்துகின்ற சிறப்புத் தன்மைகளை ஒரு சில இடங்களில் குவித்து தன் உச்ச பட்சத் தன்மையைக் காட்ட முனைகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளது.அழகை மட்டுமல்ல இன்னும் பல தன்மைகளை அது ஓரிடத்தில் குவித்து அவற்றின் உச்ச நிலைகளை வெளிபடுத்த முனைகிறது.மற்ற மிருகங்களை வேட்டையாடி உண்ணும் ஒரு மிருகத்திடம் வலிமையும், விழிப்புநிலையும், சாதுர்யமும் வியத்தகு அளவில் மிக அதிகமாக இருப்பதற்கு காரணம் இயற்கை.இத்தன்மையின் தொடர்ச்சியாகவே பகுத்தறிவோடு கூடிய மனிதனை இயற்கை பரிணாம வளர்ச்சி மூலமாக உருவாக்கியுள்ளது.மனித இனமே அறிவாற்றலின் உச்ச நிலையைக் காட்டும் இயற்கையின் படைப்பு.இந்த மனித இனத்தில் ஒரு துறையிலோ சில துறைகளிலோ மிகப்பெரிய அளவில் வற்றாத திறனை வெளிப்படுத்தும் மனிதர்கள் இருக்கிறார்கள்.இயற்கை என்ற கலைஞனின் தலை சிறந்த படைப்புகளாகவே அவர்கள் இருக்க வேண்டும்.
மனிதன் மிருகத்திலிருந்து பரிணாம வளர்ச்சியினால் பகுத்தறியுள்ள மனிதனாக மாறி இருக்கிறான். அதற்கு முக்கிய காராணியாக இருந்தது மூளையின் அளவு. விஞ்ஞானிகள் கொரிலா குரங்குகளைத் தான் மனிதனின் மூதாதையர்களாகக் கருதுகிறார்கள்.பல லட்சம் ஆண்டுகள் தொடர்ந்த பரிணாம வளர்ச்சியில் அவற்றின் மூளை அளவைக் காட்டிலும் மனிதனின் மூளை அளவு பெரிதாகி இருக்கிறது.அறிவுத்திறன், கலைத்திறன் ஆகியவை மனிதர்களை மிருகங்களிடமிருந்து சரியாக வேறுபடுத்திக் காட்டுகின்றன.இவற்றில் அறிவுத்திறன் வளர்ச்சி மனித இன வரலாற்றில் முக்கியமான அதிசயத்தக்க திருப்புமுனை.ஏனென்றால் மனிதனின் அறிவாற்றல் வெளிப்பாட்டில் பூமி இதுவரை கண்டிராத வினோதமான ஒன்று முளைத்தது.அது இயற்கையிலிருந்து சற்று மாறுபட்டது.மனிதனோடு மட்டுமே தொடர்புடைய ஒன்று.அதுதான் செய்கை தன்மை.ஒரு குரங்கானது மழை தன் தலை மீது விழுவதைத் தவிர்க்க ஒரு பெரிய இலையை எடுத்து தலைமேல் வைத்துப் பிடித்துக்கொண்டால் அது செயற்கை அல்ல.ஆனால் ஒரு மனிதன் உலோகத்தாலும், துணியாலும் இன்னும் சில பொருள்களாலும் செய்யப்பட்ட ஒரு குடையைப் பிடித்துக்கொண்டு நடந்தால் அவன் செல்லும் பாதை செயற்கையின் பாதை.செயற்கைத் தன்மையைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளும் போதுதான் மனிதனின் அளப்பரிய அறிவாற்றலின் தன்மையை நுட்பமாக ஆராய முடியும்.
மனிதனின் அறிவு பெரும் வளர்ச்சி கண்ட போது மனமும் வளர்ந்து அதன் தேவைகள் விரிவடைந்து செயற்கைதன்மை அதிகமாக பரவியது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஒரு மனிதன் இந்த நவீன உலகத்திற்கு வருவதாக வைத்துக் கொள்வோம்.அவன் இது, தான் வாழ்ந்த உலகமே அல்ல என்று கூறுவான்.நாம் பயன்படுத்தும் கைக்கெடிகாரம் முதல் பயணிக்கும் வாகனங்கள் வரை எல்லாமே செயற்கையானவை.நாம் உண்ணும் உணவும் முழுக்க முழுக்க இயற்கையானது கிடையாது.செயற்கை நிறமிகள், தண்ணீரில் சேர்க்கப்படும் குளோரின் இவைகளைத் தவிர்த்து நம்மால் உண்ணவோ நீரைப்பருகவோ இயலாது.அந்த அளவுக்கு செயற்கைப் பொருள்கள் நம் வாழ்வில் கலந்துள்ளன.நாம் அணிகின்ற ஆடைகள் அவற்றில் உள்ள பொத்தான்கள்,வாசனை திரவியங்கள்,இன்னும் மருந்து மாத்திரைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
மனிதன் இயற்கையின் படைப்பு.மனிதன் இயற்கையால் செதுக்கப்பட்டு உருவாக்கப்பட்டவன்.ஆகையால் மனிதன் கண்டுபிடிப்பது, உருவாக்குவது, உற்பத்தி செய்வது எல்லாம் இயற்கை என்று சிலர் வாதம் செய்யலாம்.அது மேம்போக்கானது.அதை ஏற்றுக்கொள்ள முடியாது.ஒரு மரம் விதையிலிருந்து வளர்கிறது.அது செடியாகி பின் வளர்ந்து கிளைகளைப் பரப்பி மரமாகிறது.திடீரென்று ஒருநாள் அதன் கிளைகளின் நுனியில் மின்சார விளக்குகள் ஒளிர்கின்றன என்று வைத்துக்கொள்வோம்.அந்த மின்சார விளக்குகள் மின் கம்பிகளை இணைத்து மின்சாரம் பாய்ச்சப்பட்டு எரியும் விளக்குகள் அல்ல.அவை மலர் போல கனிபோல கிளையில் முளைத்து எரியவும் செய்கின்றன என்று கற்பனை செய்வோம்.இப்படிப்பட்ட வினோத வளர்ச்சி தான் பரிணாமச் சங்கிலியின் தற்போதைய கடைசிக் கண்ணியாக இருக்கும் மனிதனால் வெளிப்படுத்தப்படுகிறது.மனிதன் சுவாசிப்பது உண்ட உணவு செரித்து இரத்தமாக மாறி உடலெங்கும் பாய்வது போன்று அனைத்தும் இயற்கையாகத்தான் நடைபெறுகின்றன.அதே வேளையில் மனிதனின் அதிசயத்தக்க அறிவாற்றல் அதன் விளைவுகள் இயற்கையிலிருந்து துருத்திக் கொண்டிருக்கின்றன.அவை மரத்தில் முளைத்த மின்சார விளக்கு பூக்கள் போல உள்ளன.இதை யாராலும் மறுக்க முடியாது.
செயற்கை, இயற்கை ஆகியவற்றின் வேறுபாடுகள் பற்றிய சந்தேகங்கள் நமக்கு எழுவதற்கு ஒரு அடிப்படைக் காரணம் உள்ளது.மனிதன் அறிவு வளர்ச்சியில் மிகுந்து மற்ற உயிரனங்களைவிட மேம்பட்டவனாக மாறினான்.அப்போது மனிதனிடம் முளைத்த பகுத்தறிவால் ஒரு விபத்து நிகழ்ந்தது. அது உலகம் என்பது முழுக்க முழுக்க மனிதனுக்குச் சொந்தமான இடம் என்ற கருத்து அவனிடம் ஆழமாக வேரூன்றியது தான். இது சிறிது சிறிதாக அவனை இயற்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வைத்தது.தனக்கு கிடைத்த அபூர்வமான பகுத்தறிவின் மூலமாக எல்லாவற்றையும் ஆழமாக ஆராய்ந்து தொகுத்துப் பார்க்க வேண்டியவன் மனிதன்.அவன் மற்ற உயிரினங்களைக் காட்டிலும் இன்னும் தெளிவாக தான் இயற்கையால் படைக்கப்பட்டு அதனோடு எப்போதும் கலந்திருப்பவன் என்பதை உணர வேண்டியவன்.ஆனால் இவற்றிற்கு மாறாக அவன் சிந்தனையும் செயலும் எதிர் திசையில் சென்றது மிகவும் வியப்பான ஒன்று.மனிதன் பல வேளைகளில் முரண்டு பிடிக்கும் இயற்கையைக் கட்டியாளும் ஒரு எஜமானாகத் தன்னை எண்ணிக் கொண்டான்.அதை நிலைநிறுத்திக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு கொஞ்சம் வெற்றியும் கண்டான்.அப்போது முதல் முழுக்க முழுக்க தன்னை இயற்கையிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கத் தொடங்கினான்.அங்கே எது இயற்கை எது செயற்கை என்ற ஐயப்பாட்டிற்கான விதை விதைக்கப்பட்டது.அது காலம் செல்லச் செல்ல சிறிது சிறிதாக வளர்ந்தது.பின்னர் விஞ்ஞான அறிவின் வியத்தகு வளர்ச்சி நவீன மனிதனை ஒரு பெரும் போதையில் தள்ளியது.அதில் அகந்தை கலந்த ஒரு வித புது ஆனந்தத்தை மனிதன் உணர்கிறான்.அதன் மயக்கத்தில் அவன் எண்ணத்தில் உதிப்பது ஒன்றுதான்.மனிதன் என்பவன் செயற்கையாக ஒரு பிரமாண்ட உலகத்தை இந்த பூமியில் படைத்த நவீன பிரம்மா.இது சிலரின் பிரகடனமாகக் கூட இருக்கலாம்.ஆனால் இது ஒரு வித மயக்கத்தில் வெளிவரும் வார்த்தைகள்.அதனால் மனிதன் ஒன்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறி இருக்க வாய்ப்புள்ளது.பிரமாண்டமான கட்டமைப்பு வளர்ச்சியை ஏற்படுத்தி,மேலும் அது உலகம் முழுவதும் பரவுவதற்கும் வழிமுறைகளைக் காண்பவன் மனிதன்.இவற்றிற்கு என்றுமே குறையாத விருப்பங்களும், ஆவலும் கலந்த எரிபொருள் ஒன்று மனிதன் என்ற என்ஜினுக்குத் தேவை.அதை யார் அவனுக்கு தருவது?இயற்கை ஒன்றால் மட்டுமே மனிதனுக்கு அதை வழங்க முடியும்.ஏனென்றால் மனிதன் என்பவன் இயற்கையின் படைப்பு.இதுவே நவீன உலகின் வளர்ச்சி மயக்கத்தில் மனிதன் அடிக்கடி மறந்து போவது.
மனிதன் செயற்கையாக பலவற்றை உருவாக்குவதும் அதைக் கண்டு மகிழ்வதும் தானே விரும்பி கலந்து கொள்ளும் ஒரு வித விளையாட்டு.நீர் ஆவியாகி மேகமாக மாறுகிறது.அது நீராக விழும் போது துளிகளாக பூமியை நோக்கி வருகின்றன.இந்த நீர்த் துளிகள் தான் மனிதனும் அவன் சிந்தனகளும்.இயற்கையிலிருந்து புறப்பட்டு அறிவாற்றலில் உயர்ந்து மேகமாக திரண்டு இருக்கிறது மனித இனம்.அது துளியாக மாறும் போது தன்னை பூமியிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கிறது.அதே வேளையில் பயணிக்கிறது.அது மீண்டும் பூமியில் உள்ள நீரில் கலக்கிறது.அது போல மனிதனும் தன்னை வேறுபடுத்திப் பார்த்த தன் சிந்தனைகளோடு மீண்டும் மரணத்தில் இயற்கையோடு கலந்துவிடுகிறான்.அப்போது அவன் தன் ஆயுள் முழுவதும் வளர்த்த எண்ணங்களும் கருத்துகளும் அறிவுதிறன் வெளிபாடுகளும் வீணாவதில்லை.மழைத் துளியானது பூமியை நோக்கி வரும் போது மிக சிறிய அளவிலாவது வெப்பத்தாலும் காற்றாலும் கொஞ்சம் ஆவியாகி மிதக்கும்.அது போல உயர்ந்த மனிதர்களின் சிந்தனைகள் நிலைத்து அடுத்த தலைமுறைக்குச் செல்லும்.
ஒரு தெரு நாய் ரப்பர் துண்டு ஒன்றை மாமிசம் என்று தவறாகக் கருதி அதை விழுங்கிவிட்டு வயிற்று வலியல் அவதிப்படுகிறது.அதே தெருவில் ஒரு காகம் ஒரு மின்வயர் துண்டைக் கண்டெடுக்கிறது.அதைத் தன் கூட்டில் வைத்து அதை பலப்படுத்துகிறது.ஒரு சரணாலயத்தில் பார்வையாளர் ஒருவர் வீசிவிட்டுப் போன பாலித்தின் பையில் கொஞ்சம் உணவுப் பொருள் மிச்சம் இருக்கிறது.ஒரு குட்டியானை அதை தின்று அடுத்த நாள் சாலையோரம் இறந்து கிடக்கிறது.உயிரியல் பூங்கா ஒன்றில் அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி அபூர்வக் கரடிகள் உள்ளன.அதில் ஒன்று நோய்வாய்ப்பட்டு மரணப் படுக்கையில் கிடந்தது.மருத்துவர்களும், உதவியாளர்களும் அதற்கு சிகிச்சை அளித்தார்கள்.அது அதிசயத் தக்க வகையில் மறுவாழ்வு பெற்றது.அது மட்டுமல்ல சென்ற வாரம் ஓர் அழகிய குட்டியை ஈன்றிருக்கிறது.செயற்கைக்குத் தொடர்பில்லாத மிருகங்களும், பறவைகளும் மனிதன் உண்டாக்கிய செயற்கை உலகில் தங்களை தகவவமைத்துக் கொண்டு வாழத் தொடங்கி விட்டன.இதில் ஒன்றை இயற்கை மற்றொன்றை செயற்கை என்று பிரித்துக் காண்பது கொஞ்சம் சிக்கலான வேலை.நாம் கேட்கும் இசையில் இரண்டு இசைக்கருவிகள் இணைந்து ஒலிக்கின்றன.அந்த இசையை நாம் வாழும் வாழ்க்கையாக உணர்கிறோம்.இசையில் லயித்திருக்கும் போது இரண்டு இசைக்கருவிகளின் ஓசைகளை சற்று தனித்தனியாக நம்மால் கேட்க இயலும்.அது போல இந்த அவசர உலகில் இயற்கையையும்,செயற்கையையும் ஒருவரால் பிரித்து உணர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.அப்படி இருந்தும் நாம் சில வேளைகளில் பூமியில் நடக்கும் எல்லாமே இயற்கை தான் என்று சொல்லத் துணிகிறோம். விஞ்ஞான பூர்வமான ஆதாரங்களுடன் மனிதர்களாகிய நாம் இயற்கையிலிருந்து வந்தவர்கள் என்று நிறுவுகிறோம். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் இயற்கை ஆற்றலின் புதிய வடிவங்கள் தான் என்று வாதிடுகிறோம்.ஆனால் விண்ணில் சீறிப்பாய்ந்து செல்லும் ஒரு பிரமாண்டமான ராக்கெட்டைப் பார்க்கும் மனிதன் ஒருவனால் இவற்றை ஒப்புக்கொள்ள இயலாது.அவன் இதுவரை கொண்ட கருத்து அங்கே உடைந்து போகிறது.
ஒரு நிலையில் செயற்கை என்பது எது என்று உறுதியாகச் சொல்ல வேண்டிய கட்டாயம் மனிதனுக்கு ஏற்படுகிறது.குறைந்த பட்சம் இயற்கைக்கும், செயற்கைக்கும் உள்ள அழுத்தமான வேறுபாட்டையாவது சொல்ல வேண்டும்.பொதுவாக ஏதாவது ஒன்றைச் சொல்லி தப்பிக்க இயலாது. செயற்கை என்று அழைக்கபடுகின்றவைகளுக்குள் நிச்சயமாக ஏதோ ஒரு மாறுபட்ட விஷயம் அடங்கி இருக்கிறது.மனிதனின் வியத்தகு அறிவாற்றலுக்கும், அதற்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது.
மனிதனின் செயற்கை படைப்புக்கு, விமானம் ஒரு சிறந்த உதாரணம்.ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உலகை பல கோடி ஆண்டுகளாக ஆட்சி செய்து கொண்டிருந்த டைனோசர் இனம் அழிந்து போனது.பல நூறு வகையான டைனோசர்கள் உலகம் முழுவதும் வாழ்ந்திருக்கின்றன.ராட்சத எரிகல் ஒன்று பெரும் வேகத்தோடு பூமியைத் தாக்கியது.அப்போது எழுந்த வெப்பத்தினாலும் அதன் பின் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பூமியை சூழ்ந்த தூசி,மேகப் படலத்தினாலும் டைனோசர் இனம் அழிந்து போனது.ஆனால் டைனோசர் இனம் அற்புதமான ஓர் எச்சத்தை பூமியில் விட்டுச் சென்றது.அது தான் பறவை இனம்.ஒரு சில விஞ்ஞானிகள் இந்த கருத்தை விவாதத்திற்கு உட்படுத்தினாலும், பறவைகளின் மூதாதையர்கள் டைனோசர்கள் தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த பூமியில் முதல் உயிர் சுமார் 300 கோடியாண்டுகளுக்கு முன்னால் தோன்றியது.ஒரு கணிசமான எடை உள்ள ஓர் உயிரினத்தை பரிணாம வளர்ச்சியில் பறவையாக உருப்பெற வைத்து வானில் பறக்கச் செய்ய இயற்கைக்கு கிட்டத் தட்ட 294 கோடி ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. வெறும் 45 லட்சம் ஆண்டுகள் புமியில் இருக்கும் அறிவாற்றல் மிக்க மனிதன் விஞ்ஞான வளர்ச்சி காரணமாக விமானத்தைப் படைத்துவிட்டான்.இதில் இயற்கை நிகழ்வுக்கும் செயற்கை என்று சொல்லப்படும் நிகழ்வுக்கும் இடையே உள்ள மெல்லிய வேறுபாடு அடங்கியுள்ளது.இயற்கை ஒன்றை நிகழ்த்திக் காட்ட எடுத்துக்கொள்ளும் கால அளவோடு ஒப்பிடும் போது மிக குறைந்த கால அளவில் அதை நிகழ்த்திக் காட்டுவது செயற்கை.மனிதன் சாதித்துக் காட்டிய இன்னும் சிலவற்றை ஆராய்ந்தால் கால அளவு இன்னும் மிகக்குறைவாக இருப்பதைப் பார்க்கலாம்.தாவரங்களிலும் மிருகங்களிலும் புது இனங்கள் இயற்கையில் உண்டாவதற்கு மரபணுவில் ஏற்படும் திடீர் மாற்றமே காரணம்.இதன் மூலமாகவே பூமி முழுவதும் பல வகை தாவரங்கள் பல வகை மிருகங்கள் எல்லாம் வந்தன.ஒரு தாவரத்தில் மியூட்டேஷன் அதாவது மரபணு மாற்றம் ஏற்பட்டு புதுவகைத் தாவரம் தோன்ற பல லட்சம் ஆண்டுகள் கூட பிடிக்கலாம்.ஆனால் அதை மனிதர்கள் மரபணுவியல் மூலம் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தில் ஒரு சில நாள்களில் நிகழ்த்திக் காட்டுகிறார்கள்.உலகில் இது வரை இல்லாத புதிய நிறத்தில் அதிக இதழ் அடுக்குகளோடு அழகிய புது ரக ரோஜாவைப் பூக்க வைத்துவிடுகிறார்கள்.மிருகங்களிலும் மரபணுமாற்றம் செயற்கையாக உண்டாக்கப்படுகிறது.அதன் முலமாக விஞ்ஞானிகள் தூரிகை எடுத்து ஓவியம் தீட்டுவது போல தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வண்ணங்களோடு அலங்கார மீன்களைப் பிறக்க வைக்கிறார்கள்.எனவே செயற்கை என்பது விரைவாக,விருப்பப்படி,வேண்டிய மாற்றங்களோடு மனிதனால் உருவாக்கப்படுவது.இதற்கு அணு விஞ்ஞானத்தில் நிகழ்த்திக் காட்டப்படும் சாதனைகள் சிறந்த சான்றுகளாக உள்ளன.
பிக்பேங் என்று சொல்லப்படும் மிகப் பெரிய வெடிப்பு வெளியில் நிகழ்ந்து பிரபஞ்சம் தோன்றியது.அதற்கு முன்னால் எங்கும் ஒரே இருள் மட்டும் இருக்கவில்லை. அங்கு ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவற்றின் மூலக்கூறுகள் நிறைந்திருந்தன.மிக அதிகமான அடர்த்தியுள்ள பொருள்கள் அதிக வெப்பநிலையில் சிறிய அளவில் கூடித்திரண்ட போது ஏற்பட்ட வெடிப்பில் பிரபஞ்சம் தோன்றியது என்பது விஞ்ஞானிகளின் கூற்று.அப்போது திரண்ட வாவு மேகத்தில் இருந்தவை ஹைட்ரஜனும் வாயுவும் கொஞ்சம் ஹீலியம் வாயுவும்.சூரியனில் நிகழ்வது அணுப்பிணைவு.நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள் மித மிஞ்சிய வெப்பத்தில் இணைந்து ஒரு ஹீலியம் அணுக்கருவாகும்.அப்போது மிகவும் அதிக மான அளவு சக்தி வெளிப்படும்.இதுவே அணுப்பிணைவு. இதனால் தான் சூரியன் மிதமிஞ்சிய ஒளியையும், வெப்பத்தையும் உமிழ்ந்து கொண்டே இருக்கிறது.ஒரு சூரியன் உருவாவதற்கு இயற்கை கற்பனை செய்து பார்க்க முடியாத காலம் காத்திருக்க வேண்டும்.ஆனால் இதை விஞ்ஞானிகள் உடனே நமக்கு நிகழ்த்திக் காட்ட முடியும்.பெரும் நாசத்தை விளைவிக்கக் கூடிய ஹைட்ரஜன் குண்டின் அடிப்படை அணுப்பிணைவுதான்.
செயற்கை அதிசயங்கள் காலத்தை குறுக்கி விடுகின்றன. வேகமாக செயலாற்றுவது செயற்கையின் இயல்பாக உள்ளது.செயற்கையாக அரிய செயலை செய்து காட்டுகின்ற மனிதனின் அறிவாற்றலும், திறனும் இதற்கு முக்கிய காரணிகளாக உள்ளன.அறிவுத்திறனும், ஆற்றலும் இயற்கையை விஞ்சும் வகையிலேயே வேகமாக வெளிப்படுகின்றன.விஞ்ஞானம் என்பது இயற்கையை கண்டுதெளிவது.அதாவது இயற்கையை வாசித்துப் பார்ப்பது என்ற ஒரு கருத்து பல காலமாக உள்ளது.கண்டுபிடிப்புகள் எல்லாம் இயற்கையின் இயல்பை வேறு ஒரு வடிவில் வெளிப்படுத்திக் காட்டுகின்றன என்பதையே அது நமக்கு உணர்த்துகிறது.அது ஒரு வகையில் உண்மைதான். ஆனால் செயற்கை என்று நாம் குறிப்பிடும் மனிதனின் செயல்கள் வியத்தகு அளவில் மிகக்குறைந்த கால அளவில் நிகழ்த்தப்படுகின்றன.இதுதான் இயற்கைக்கும் செயற்கைக்கும் உள்ள மிக நுட்பமான வேறுபாடு.இதனால் தான் மனிதன் காலப்பயணம் செய்யும் கற்பனையை விஞ்ஞான அடிப்படைகளோடு வளர்த்துக் கொள்கிறான்.காலப் பயணத்தில் பின்னோக்கி சென்று பழைய வரலாற்று நிகழ்வுகளைக் காண்பது,முன்னோக்கி சென்று வருங்கால உலகில் இப்போதே வாழ்வது போன்று பல கதைகள் உள்ளன. இவற்றில் உள்ள நுட்பமான விஞ்ஞானப் பார்வைக்கு முக்கிய காரணியாக இருப்பது மனிதனின் அறிவாற்றல் தான்.அது எப்போதும் குறுகிய காலத்தில் அதிசயங்களை நிகழ்த்திக் காட்டும் நோக்கத்தில் செயல்படுகிறது.
மனிதனின் தனித்துவம் மிக்க மிகச்சிறந்த அறிவாற்றலின் உச்சமாக இருப்பது கணிதவியல்.பல்லாயிரம் ஆண்டுளுக்கு முன்னரே மனிதன் இதனை வளர்த்து தன் திறனை வெளிப்படுத்தியுள்ளான்.இப்போது கணிதம் பல்கிப் பெருகி இருக்கும் எல்லாத்துறைகளிலும் இரத்தம் போலப் பாய்ந்து உயிர் தருகிறது.கணிதத்தில் மிகுந்த புலமை கொண்ட ஒருவர், ஆய்வில் தனக்கு இருக்கும் ஆர்வம் காரணமாக கணிதவியலில் புதியவற்றைப் படைக்க முடியும்.மனிதனின் அறிவாற்றல் திறன் வெளிப்பாட்டிற்கு இது மிகச் சிறந்த எடுத்துக்காட்டு.இந்தத் திறன் மனிதனுக்கே உரித்தான, மனிதனால் மட்டுமே வெளிப்படுத்தக் கூடியது.மனிதனாய் மாற்றம் அடைந்ததோடு மற்ற உயிர்களிடமிருந்து ஒரு வகையில் முற்றிலும் தனியாக பிரிந்து விட்டவன் மனிதன்.மனித இனத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக இருப்பது அதன் கணிதத்திறன் தான்.மிக குறைந்த காலத்தில் இயற்கையின் இயல்புகளை நிகழ்த்திக்காட்டுவது நவீன மனிதன் அமைக்கும் செயற்கை அரசாங்கம்.அதன் செங்கோலாக இருப்பது கணிதவியல்.
அறிவாற்றல் பொங்கிப் பெருகி பிரவாகமாக மாறுவது தனிப்பட்ட மனிதர்கள் மூலமாகத்தான்.இதற்கு சரியான சான்றாக அழியாப்புகழ் பெற்ற கணித மேதை ராமானுஜன் இருக்கிறார்.அரிய மனிதர் ஒருவரிடம் அறிவாற்றல் திரண்டு வெளிப்படுகிறது.அதனை அவர் மிகச் சரியாக சாதனையின் உச்சம் நோக்கி செல்ல வைக்கிறார்.இவற்றைத்தான் நாம் ராமானுஜன் வாழ்க்கையைப் படிப்பதன் மூலமாக அறிகிறோம்.ராமானுஜன் முப்பத்திரண்டு வயதிலேயே இறந்து விட்டார்.ஆனால் அந்த குறைந்த காலத்தில் அவர் நிகழ்த்திய சாதனைகள் வேறு எந்த கணித மேதையும் செய்யாதவை. உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை தலை சிறந்த கணித மேதைகள் கொண்ட ஒரு பட்டியல் தயார் செய்தால் அதில் நூறுக்கும் மேலானவர்கள் இருப்பார்கள்.அதில் முதல் இருபத்தி ஐந்து மேதைகளின் பெயர்களுக்குள் ராமானுஜனின் பெயர் இடம் பெறும் என்பது பெருவாரியான கணித மேதைகளின் கருத்தாக இருக்கும்.
ராமானுஜன் தனக்கு சாதகமான ஒரு காலத்தை எதிர் நோக்கி இருக்கவில்லை.பள்ளி நாள்களிலேயே கணிதத்தில் தன்னை வேகமாக வளர்த்துக் கொண்டார்.தாமாகவே மேலைநாட்டு கணித நூல்களைக் கற்றார்.அதன் மூலமாக பல புதிய கணிதத் தேற்றங்களை உருவாக்குவதற்கு ஊக்கம் பெற்றார்.குடும்ப சூழல் காரணமாக சென்னை இந்திய துறைமுகக் கழகத்தில் குமாஸ்தாவாக பணியாற்றினார்.அதே வேளையில் கணிதவியல் பயணத்தை வெறியோடு தொடர்ந்தார்.1913 இல் அங்கு தலைமைக் கணக்கராக இருந்த எஸ்.என் ஐயர் ஒரு சிறந்த கணித வியலாளராகவும் இருந்தார்.1913 இல் அவர் ராமானுஜனின் பிரைம் எண்கள் பற்றிய ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார்.அதே ஆண்டு ராமானுஜத்திற்கு இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் இருந்த கணிதவியலாளர் ஜி.ஹெச்.ஹார்டியின் நட்பு கிட்டியது.ராமனுஜன் இவருக்கு அனுப்பிய கடிதத்தில் தான் ஒரு குமாஸ்தாவாக பணியாற்றுவதாகவும்,பள்ளிக் கல்விமட்டும் தான் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.மேலும் தனக்கு கணிதத்தின் மீது இருக்கும் தணியாத ஆர்வத்தின் காரணமாக தனக்கென கணிதத்தில் ஒரு பாதை அமைத்துக் கொண்டதாகவும் எழுதியிருந்தார்.அந்த கடிதத்தோடு தான் உருவாக்கிய நூற்றுக்கும் அதிகமான தேற்றங்களையும் அனுப்பி வைத்தார்.முதலில் ஹார்டி இவைகளைப் பார்த்தவுடன் சந்தேகம் அடைந்தார்.அவை வேறு ஒருவருடையவைகளாக இருக்கும் என்று எண்ணினார்.ஆனால் தேற்றங்களை முழுமையாக ஆராய்ந்தவுடன் நிச்சயமாக அனுப்பியவர் ஒரு மேதை என்பதை உணர்ந்து கொண்டார். அனுப்பப்பட்ட தேற்றங்களில் பல முற்றிலும் புதியவை என்று கடிதம் மூலம் ராமானுஜனுக்குத் தெரிவித்தார்.பிறகு 1914 இல் ராமனுஜனை இங்கிலாந்துக்கு வரவழைத்தார். அப்போது ராமானுஜனுக்கு கணிதத்தில் அடிப்படை கல்வி முழுமையாக இல்லாததால் அதனை போதிக்கும் பணி லிட்டில் உட் என்பவரிடம் தரப்பட்டது. கணிதவியலாளர் லிட்டில் உட், ராமானுஜனுக்கு கடினமான கணிதமுறைகளை பயிற்றுவித்த அதிசய அனுபவத்தை பற்றி ஹார்டி இவ்வாறு கூறுகிறார்
“ ராமானுஜனுக்கு சொல்லித் தருவது லிட்டில் உட்டுக்கு மிகக்கடினமாக இருந்தது.ஒரு புதிய விஷயத்தை கட்டாயம் அவர் அறிந்து கொள்ள வேண்டும் என்று எந்த நேரத்தில் குறிப்பிட்டாலும் அது தொடர்பான ராமானுஜனின் சொந்த சிந்தனைகள் கட்டுக்கடங்காமல் பொழியத் தொடங்கிவிடும்.இதனால், தான் சொல்ல நினைத்ததை வலியுறுத்துவது லிட்டில் உட்டுக்கு மிகக்கடினமாக இருந்தது.”
ராமானுஜன் ஒரு கணிதக் கடல் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.1915 இல் கேம்பிரிட்ஜ் பலகலைக்கழகத்தில் ராமானுஜன் விஞ்ஞான இளங்கலைப் பட்டம் பெறுகிறார்.துரதிருஷ்டவசமாக 1917 இல் அவர் கடுமையாக காச நோயால் பாதிக்கப்படுகிறார்.இந்நிலையில் அவருக்கு 1918 கேம்ப்ரிட்ஜ் ஃபிலசொஃபிகல் சொசைட்டியில் ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.அந்த வருடத்திலேயே ஹார்டி, லிட்டில் உட் போன்ற பல சிறந்த கணித வியலாளர்களின் பரிந்துரையின் பேரில் லண்டன் ராயல் சொசைட்டியிலும் மிகக் கௌரவமான ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.அதன் பிறகு கேம்ப்ரிட்ஜ் ட்ரினிட்டி கல்லூரியில் அவருக்கு ஃபெல்லோஷிப் வழங்கப்படுகிறது.ஓரளவு உடல் நலம் தேறிய ராமானுஜன் 1919 இல் இந்தியா திரும்பி, 1920 இல் இறந்து விடுகிறார்.ஆறாம் நூற்றாண்டிலேயே பூமியின் சுற்றளவை கணக்கிட்டுச் சொன்ன மாமேதை ஆரியபட்டா. பனிரெண்டாம் நூற்றாண்டில் கணிதத்தில் பல சாதனைகளைச் செய்தவர் கணித மேதை பாஸ்கரா.அவர் நிகழ்த்திய அதே சாதனைகள் பல நூற்றாண்டுகள் கழித்து புதிய கண்டுபிடிப்புகள் போல ஐரோப்பாவில் பல மேதைகளால் மூலம் வெளிப்பட்டன.பாஸ்கராவின் ஆய்வுக்குறிப்புகள் பல ஐரோப்பாவில் ரகசியமாக கசிந்து விட்டன என்று ஆய்வாளர்கள் இப்போது கருதுகிறார்கள். ஆரியபட்டா, பாஸ்கரா போன்ற இந்தியக் கணித மேதைகளின் வழித்தோன்றலாக உதித்த ராமானுஜன் அவர்களையும் விஞ்சி கணித உலக வரலாற்றில் நிலைப்பார்.
ராமானுஜன் 1914 இல் இருந்து 1920 க்குள் ஆறு வருடங்களில் கணிதவியலில் தன் அரிய மேதமையை உலகிற்கு நிரூபித்துவிட்டார்.அதனால் தான் ஹார்டி
“ ராமானுஜன் இந்தியாவில் இத்துறையில் யாரும் அடையாத புகழோடு இந்தியா திரும்புகிறார்.இவர் இந்தியாவின் பொக்கிஷம்…” என்றார்.
மேதைகளாக பலர் உலகில் தோன்றிக் கொண்டே இருக்கிறார்கள்.அந்த மேதைகளின் அறிவுத் தாகமும் அவர்கள் தங்கள் தனித் திறனை வெளிப்படுத்தும் வேகமும் இயற்கை அதிசயங்களுக்கு ஒப்பானவை.மிதமிஞ்சிய அறிவாற்றல் தனித்தன்மையோடு பொங்கி வருவதற்கு ராமானுஜனின் கணிதத்திறன் சான்றாக இருக்கிறது.கல்லூரிக் கல்வி பெறாத காலத்திலேயே மிகக்கடினமான அரிய கணிதத் தேற்றங்கள் அவரிடமிருந்து ஊற்றெடுத்து வெளிப்பட்டன.இன்னும் சரியாகச் சொன்னால் மிக இயல்பாக இயற்கையாக அவரிடமிருந்து திறன் பொழிந்து கொண்டிருந்தது.முழுக்க முழுக்க மனிதனால் வளர்க்கப் பட்ட செயற்கை அறிவாற்றலோடு நுட்பமாக இயற்கை இணைவதை நாம் அங்கே காணமுடிகிறது.
நன்றி : கவ்யா - தமிழ் ஜனவரி – மார்ச் 2013
No comments:
Post a Comment